Wednesday, August 28, 2013

கற்பழிக்கப்பட்ட சிறுமிக்காக ஏன் போராடவில்லை?

கேள்வி 1:  
திருச்சியைச் சேர்ந்த முஸ்லிம் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து முஸ்லிம் இயக்கங்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதற்காக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது உண்மையா? உண்மை என்றால் தவ்ஹீத் ஜமாஅத் இதில் போராடாமல் போனதற்குக் காரணம் என்ன? 

நஸீர் அஹ்மது, திருச்சி 

இப்ராஹீம், திருச்சி 

கேள்வி 2:  

கோவையில் முஸ்லிம் சிறுவன் காவல்துறை வாகனத்தினால் விபத்துக்கு உள்ளாக்கப்பட்டு மரணித்தான். இதற்காக எல்லா அமைப்புகளும் போராடிய போது தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் ஒதுங்கிக் கொண்டது ஏன்? 

இர்பான், கோவை 
ஜக்கரியா, ஆவடி 



பதில்: 

இது குறித்து மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளும் இரு வகைகளில் உள்ளன. 

முஸ்லிம் என்ற காரணத்திற்காக நாம் சந்திக்கும் பிரச்சினைகள் முதல் வகை. 

முஸ்லிம் என்ற காரணத்திற்காக அல்லாமல் பொதுவாக நாம் சந்திக்கும் பிரச்சினைகள் இரண்டாவது வகை. 

உதாரணமாக ஒரு விபத்தில் முஸ்லிம் ஒருவர் மரணமடைகிறார் அல்லது படுகாயம் அடைகிறார் என்று வைத்துக் கொள்வோம். 

இந்த விபத்து முஸ்லிம் என்ற காரணத்திற்காக நிகழ்த்தப்படவில்லை. 

விபத்தில் முஸ்லிம்கள் மரணிப்பது போலவே முஸ்லிமல்லாத நபர்களும் மரணிக்கிறார்கள். விபத்தை ஏற்படுத்தியவர்களில் முஸ்லிம்களும் இருக்கலாம். முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கலாம். அரசு வாகனத்தினாலும் விபத்து ஏற்பட்டு இருக்கலாம். தனியார் வாகனம் மூலமாகவும் விபத்து ஏற்படலாம். விபத்துக்கு உள்ளானவரே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். அல்லது விபத்தை ஏற்படுத்தியவரே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஒரு முஸ்லிம் விபத்துக்கு உள்ளாகி மரணித்து விட்டால் அதைச் சமுதாயப் பிரச்சினையாக ஆக்கக் கூடாது. அது நியாயமாகவும் ஆகாது. நாட்டில் அன்றாடம் நிகழ்ந்து வரும் மற்ற விபத்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கு ஏற்படும் விபத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 விபத்து நடந்த பகுதியில் உள்ள மக்கள் சம்பவம் நடந்தவுடன் ஒன்று திரள்வது இயற்கையானது. விபத்துக்குக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இப்படி திரள்வார்கள். இவ்வாறு திரள்வது முஸ்லிம் என்பதற்காக இருக்கக் கூடாது. 

 முஸ்லிமல்லாதவர் விபத்துக்கு உள்ளானாலும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் திரளும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து திரள வேண்டும். இதற்காக ஊர்கள் தோறும் மாவட்டங்கள் தோறும் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமையாகாது. 

விபத்துக்கள் நடக்கும் பொழுது அதை இயக்கப் பிரச்சினையாக்காமல் எந்த இயக்கத்தின் பெயரிலும் பேனரிலும் இல்லாமல் எந்த அமைப்பின் கொடியும் இல்லாமல் மக்கள் தன்னிச்சையாகத் திரண்டால் தவ்ஹீத் ஜமாஅத்தினரும் மக்களோடு மக்களாக தவ்ஹீத் ஜமாஅத் அடையாளம் இல்லாமல் கலந்து கொள்ளலாம். 

கோவை சிறுவன் மரணத்தின் போது இப்படித்தான் நாம் நடந்து கொண்டோம். 

விபத்தை ஏற்படுத்தியது அரசு வாகனம் என்பதால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்காது. ஏனெனில் அரசாங்கத்தின் எந்த வாகனமும் இன்ஷுரன்ஸ் செய்யப்படுவதில்லை என்பதால் இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் நஷ்டஈடு கிடைக்காது. 

எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியாளரைச் சந்தித்து தக்க இழப்பீடு அளிக்க கோரிக்கை வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு தலைமை மூலம் அறிவுரை கூறி அவ்வாறு மனு கொடுக்கப்பட்டது. 

அதே நேரத்தில் முஸ்லிம் என்பதற்காக வேண்டும் என்றே வாகனத்தை ஏற்றிக் கொலை செய்திருந்தால் அப்போது அது சமுதாயப் பிரச்சனையாக மாறிவிடும். 

அது போல் கற்பழிப்பு போன்ற கொடுமைகள் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு நடந்தாலோ கற்பழித்து கொல்லப்பட்டாலோ அது முஸ்லிம் என்பதற்காக நிகழ்த்தப்பட்டது அல்ல. 

நாடே சீரழிந்து போய்க் கிடப்பதால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி அதை விட அதிகமாக முஸ்லிமல்லாதவர்கள் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

இது மதத்தின் அடிப்படையில் நடப்பது அல்ல. 

திருச்சி சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களில் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் உள்ளனர். 


முஸ்லிமுக்கோ முஸ்லிம் அல்லாதவருக்கோ இது போன்ற கொடுமை இழைக்கப்பட்டால் அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தினால் அவர்களோடு நாமும் கலந்து கொள்ளலாம். 

கொலையாளிகளையும், காமுகர்களையும் தப்ப விடக்கூடாது என்பதற்காக இது போல தன்னார்வத்துடன் உணர்ச்சி கொந்தளிப்புடன் மக்கள் திரள்வதை நாம் குறை கூற முடியாது. 

இது போன்ற பிரச்சினைகளை வைத்து ஒரு இயக்கம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில் இயக்கத்தின் பெயர், கொடி, பேனருடன் அரசியலாக்கினால் அவர்களோடு இணையாமல் ஒதுங்கிக் கொள்வது என்ற நிலைபாட்டை நம் ஜமாஅத் கடைப்பிடித்து வருகின்றது.  


காவல்துறையினர் நியாயம் வழங்காமல் வழக்கை திசை திருப்பினால் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் அப்போது அமைப்பின் சார்பில் வீரியமிக்க போராட்டம் நடத்தலாம்

ஏனெனில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக நீதி மறுக்கப்பட்டால் அப்போது அது சமுதாயப் பிரச்சினையாக உருமாறி விடுகின்றது. அவ்வாறு அல்லாமல் முஸ்லிம் என்ற காரணத்துக்காக அதிகாரிகளோ, பிற சமுதாயத்தவர்களோ அநீதி இழைத்தால் அது போன்ற விஷயங்களில் தவ்ஹீத் ஜமாஅத் மற்ற யாருக்கும் சளைக்காமல் வீரியமிக்க போராட்டம் நடத்தத் தயங்கியதில்லை

இந்த நிலைப்பாட்டுக்கு ஏற்பவே நம்முடைய நடவடிக்கைகள் அமைதுள்ளன.
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/unarvuweekly/karpazikapata_sirumikaka_en_poradavillai/
Copyright © www.onlinepj.com

2 comments:

Kartheesan said...

அருமையான, ஆழ்ந்த உணர்வுள்ள வார்த்தை விளக்கம். வாழ்த்துக்கள். அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டிய வார்த்தைகள்.

Kartheesan said...

அருமையான, ஆழ்ந்த உணர்வுள்ள வார்த்தை விளக்கம். வாழ்த்துக்கள். அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டிய வார்த்தைகள்.